கடையம் அருகே நள்ளிரவில் வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை
9/2/2025 4:03:53 PM
கடையம், -கடையம் அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை குடியிருப்பில் வலம் வந்தது தானா அல்லது வனத்துறை வேறு எங்கிருந்தோ சிறுத்தையை கொண்டு வந்து ஏமாற்றுகிறார்களா என பொதுமக்கள் சந்தேகம் கிளப்புகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடையம் மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரப்பகுதியான கோவிந்தபேரி, அழகப்பபுரம், பெத்தாம்பிள்ளைகுடியிருப்பு, சிவசைலம், சம்பன்குளம், தோரணமலை, கானாவூர் என பல கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம். நெல், கடலை, கரும்பு, கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை பயிரிட்டு வருகின்றனர். இதுதவிர வீடுகளில் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களையும், பயிருக்கு காவல் இருக்கும் வேட்டை நாய்களையும் வேட்டையாடி வருகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றி நெல், சிறுகிழங்கு போன்ற பயிர் வகைகளை நாசம் செய்து நிலங்களையும் சேதபடுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. மிளாவும் கடலை, சிறுகிழங்கு போன்ற பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
சிறுத்தை, காவல்காக்கும் வேட்டை நாய்கள், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் வீட்டு தொழுவங்களில் உள்ள மாடு, கன்றுகளை கொன்று தின்று வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எந்த நேரமும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 27ம் தேதி இரவு சம்பன்குளம் அருகேயுள்ள வாட்டரெட்டு பகுதியில் புகுந்த சிறுத்தைகள் விவசாயி கருப்பசாமியை ஓடஓட விரட்டி அவர் வயலில் காவலில் இருந்த நாய்களை கடித்து குதறின.இதனால் வாட்டரெட்டு மேல் பகுதியான சிறுத்தை வரும் வழியில் இலுப்பையாறு பகுதியில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டிருந்தது. இதில் உயிருடன் உள்ள நாயை கட்டி வைத்திருந்தனர். நாய்க்கு உணவு அளித்து கூண்டு பகுதியில் இரவு பகலாக வனச்சரகர் இளங்கோ தலைமையில் வனவர் மோகன் முன்னிலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் பத்திரிகையாளர்களிடம் போனில் பேசிய வனத்துறையினர், ``வாட்டரெட்டு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சிறுத்தை சிக்கியுள்ளதாகவும் அதனை படம் எடுக்க வருமாறும்’’ அழைத்தனர். அதன்படியே கூண்டில் சிக்கிய சிறுத்தையை காண்பித்தனர். கூண்டுக்குள் இருந்த நாயை அது கொன்று போட்டிருந்தது.
வனத்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாட்டரெட்டு பகுதியில் மக்களை பீதிக்குள்ளாக்கிய சிறுத்தை இரண்டு குட்டிகளுடன் உலா வந்தது. ஆனால் கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியதாக கூறுகின்றனர். மேலும் சிறுத்தை சிக்கிய இடத்தில் கூண்டை பொதுமக்கள் முன்னிலையில் எடுக்காமல் இரவோடு இரவாக வனத்துறையினர் எடுத்துச் சென்றதால் கூண்டில் சிக்கிய சிறுத்தை குடியிருப்புகளில் வலம் வந்த சிறுத்தை தானா அல்லது வேறு எங்கோ பிடித்த சிறுத்தையை இங்கு சிக்கியதாக வனத்துறையினர் கணக்கு காட்டுகிறார்களா என்று பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘இலுப்பையாறு பகுதியில் ஒரு பெரிய சிறுத்தை மற்றும் இரண்டு குட்டிகளுடன் வலம் வந்தது. இப்போது சிறுத்தை மட்டும் சிக்கியதாக வனத்துறையினர் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதில் எங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் அதனுடன் வந்த குட்டிகள் இன்னும் சிக்கவில்லை. எனவே அவைகளை பிடிக்கவும் வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும்’’ என்றனர்.தாய் சிறுத்தையுடன் வந்த குட்டிகள் இன்னும் சிக்காததால் பொதுமக்களும், விவசாயிகளும் இன்னும் பீதியிலேயே உள்ளனர்.இதற்கிடையில் கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் பாபநாசம் மலைப்பகுதியான கன்னிக்காட்டில் கொண்டு விட்டனர்.