சாகச விபரீதம்
8/8/2025 3:27:09 PM
திருமண நாளைக் கொண்டாட, இந்தியாவைச் சேர்ந்த 36 வயது பெண் ஷில்பா அகர்வால், கணவருடன் தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள பாட்டாயா நகரக் கடற்கரையில், பாராசெய்லிங் செல்ல முடிவெடுத்தார். பாராசூட்டில் பறந்தபோது திடீரெனக் கீழேவிழுந்து ஷில்பா இறந்தார். திருமண நாள் சோகமயமானது.
பாராசெய்லிங் சாகச விளையாட்டு. எடுத்தவுடன் பாராசூட்டில் பறந்துவிட முடியாது. அதற்கான பயிற்சி தேவை. குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், துவக்க கட்ட வீரர்கள் பயிற்சி செய்யக்கூடாது. காற்றின் தன்மை, உபகரணங்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இதற்கு அவசியம்.
கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்த பாராசெய்லிங் நிகழ்ச்சியின்போது, தொழிலதிபர் மல்லேஸ்வரராவ் என்பவர், பெல்ட் கழன்று விழுந்து பரிதாபமாக இறந்திருக்கிறார். இதுபோன்ற சாகச விளையாட்டுகள், இப்போது மாநகரங்களில் சர்வசாதாரணமாக நடத்தப்படுகின்றன. அனுமதி பெறுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எதுவும் இல்லாமலே, இவை நடத்தப்படுவதால், விபரீதங்களுக்கும் பஞ்சம் இல்லை.
சாகச விளையாட்டு வீரத்தையும், துணிச்சலையும் பறைசாற்றுவதாக இருக்கலாம். ஆனால், உயிரையே விலையாகக் கொடுக்க முடியுமா?
கோவையில் நடந்த நிகழ்ச்சியின்போது, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. பாராசூட்டில் பறப்பதற்கு முன்பு, பெல்ட், கொக்கிகள் உள்ளிட்டவற்றைச் சரியாக அணிந்துள்ளனரா போன்ற அம்சங்கள் கூட சரியாகக் கண்காணிக்கப்படவில்லை.‘எனது மகன் அடுத்து பாராசெய்லிங் செல்வதாக இருந்தான். மல்லேஸ்வர ராவ் கொக்கி, பெல்ட் போன்றவற்றைச் சரியாக மாட்டுவதற்கு முன்பே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விசில் அடித்துவிட்டார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்’ என்று இந்த சோகத்தை நேரில் பார்த்த இக்பால் என்பவர் கூறுகிறார்.
ஆடி மாதம் காற்றுக்காலம். குறிப்பாக, கோவையில் ஆடி மாதத்தின்போது காற்று பலமாக வீசும். பாராசெய்லிங் மற்றும் பலூனிங் போன்ற சாகசங்களை நடத்துவதற்கு இது ஏற்ற மாதம் இல்லை. இதைக் கூட அறியாமல், எப்படி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது புரியாத புதிர்.
பாராசெய்லிங் போன்ற சாகச விளையாட்டுகள் தற்போது வணிகமயமாகிவருகின்றன. பாராசெய்லிங்குக்கென பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள், இந்தியாவில் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை.பாராசூட் என்பது உயிர்ப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் சாதனம். அதுவே உயிருக்கு எமனாக இனியும் அனுமதிக்கக்கூடாது.