ஏர்போர்ட்டில் 66வது விபத்து கண்ணாடி விழுந்து நொறுங்கியது
7/29/2016 5:45:19 PM
மீனம்பாக்கம், -சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2013, ஏப்ரல் மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி வரை 65 விபத்துக்கள் நடந்துள்ளது. மொத்தம் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், 66வது விபத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது.சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் உள்புறமாக பயணிகள் வரும் இடம் உள்ளது. பின்புறம் விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தின் அருகே கண்ணாடி சுவர் அமைந்துள்ளது. 30 அடி உயரத்தில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த 8 அடி நீளம், 4 அடி அகலம் ெகாண்ட கண்ணாடி பயங்கர சத்தத்துடன் பெயர்ந்து கீழே விழுந்து நொறுங்கியது.அந்த நேரத்தில் விமானங்கள் எதுவும் அங்கு இல்லை. ஊழியர்களும் இல்லை. எனவே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அருகில் உள்ள மற்ற விமானங்கள் நிறுத்தும் பகுதியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய உயரதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஊழியர்களை வரவழைத்து இடிபாடுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். விபத்து நடந்தது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.