தகவல் சொல்லிவிட்டு காவல் உதவி மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை
7/29/2016 5:33:26 PM
திருச்சி, -கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் குப்புசாமி. ஓய்வு போலீஸ் ஏட்டு. இவரது மகன் வெங்கட்ராமன் (43). ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலைகாவலர். இவரது மனைவி அனிதா. இவர்களது மகன் மணிரத்னம் (10). திருச்சி பிராட்டியூர் தீரன்நகர் விஸ்தரிப்பு வாஞ்சிநாதன் நகரில் வெங்கட்ராமன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.நேற்று மதியம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவல் உதவி மையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், வெங்கட்ராமன் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில், வெங்கட்ராமன் சென்னையில் பணிபுரிந்தபோது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறி, அவருடன் மனைவி அடிக்கடி தகராறு செய்துள்ளார். அதன்பின் வெங்கட்ராமன் திருச்சிக்கு பணிக்கு வந்தார். இங்கு வந்த பிறகும் வெங்கட்ராமனின் நடத்தையில் அவரது மனைவிக்கு சந்தேகம் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் வெங்கட்ராமன் பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது அவரது சட்டையில் ஜிகினா ஒட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த மனைவி, வெங்கட்ராமனுடன் சண்டை போட்டுள்ளார். தொடர்ந்து மனைவி சந்தேகப்பட்டதால் மனவேதனையில் தவித்து வந்த வெங்கட்ராமன், விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
174 நடக்கப்போகுது
வெங்கட்ராமன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் சென்று, அம்மா மண்டபம் காவல் உதவி மைய பணிக்கு செல்வதற்காக ரைட்டரிடம் மைக் வாங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் அனைவரும் நன்றாக வேலை பாருங்கள், நன்றாக இருங்கள் என சக போலீசாரிடம் கூறி கைகுலுக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த ஒரு போலீஸ்காரரிடம், இன்னைக்கு நம்ம லிமிட்டில் 174(தற்கொலை பிரிவு) ஒன்னு நடக்கப்போவுது, பாத்துக்குங்கள் என்று கூறிச் சென்றுள்ளார். இதை அவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது அவர் தான் தற்கொலை செய்யப்போவதைத்தான் அப்படி கூறியிருக்கிறார் என நினைத்து போலீசார் வேதனையடைந்துள்ளனர்.