செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி - குமரியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
7/29/2016 5:24:30 PM
நாகர்கோவில், - இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்து முன்னணி, பாரதிய ஜனதா, இந்து மகாசபா, சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். கற்பக விநாயகர், அன்ன பறவை விநாயகர், தாமரை விநாயகர், மயில் வாகன விநாயகர், செல்வ விநாயகர் என பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். 3 நாட்கள் பூஜைக்கு பின், இவை நீர் நிலைகளில் கரைக்கப்படும். சுமார் 35 நாட்களே இருப்பதால் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
முதற்கட்டமாக சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரீசால் ஆன சிலைகள் தயாரிக்க கூடாது என உத்தரவு உள்ளது. எனவே களிமண் சிலைகள் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்து மகா சபா சார்பில், நாகர்கோவில் அடுத்த மேல சூரங்குடியில் சிலை தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதை அதன் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். இந்து மகா சபா சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிலைகள் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. குமரி மாவட்டத்தில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்படும் என நிர்வாகிகள் கூறி உள்ளனர். இதே போல் இந்து முன்னணி, பா.ஜ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் சிலைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.