போலீசிடமே கட்டுக்கதை விட்டார் அமித்ஷா மருமகன் என்று சொல்லி பாஜ எம்எல்ஏக்களிடம் மோசடி - கில்லாடி ஆசாமிக்கு வலை
7/29/2016 4:46:13 PM
உஜ்ஜைன், -மத்திய பிரதேசத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உஜ்ஜைன் காவல் நிலையத்திற்கு டிப்டாப் வாலிபர் ஒருவர் வந்தார். தான் புனேவைச் சேர்ந்தவர் என்றும், தனது பெயர் விராஜ் ஷா என்றும் கூறினார். போலீசாரிடம் மேலும் அவர் கூறுகையில், ‘‘சாந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ1 கோச்சில் வந்த போது எனது பேக் திருடு போய்விட்டது. அதில் விலை உயர்ந்த லேப்டாப், வாட்ச், மொபைல் மற்றும் நகைகள் வைத்திருந்தேன். சுமார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போய் விட்டது’’ என்று கூறி, புகார் கொடுத்தார். பின்னர் உஜ்ஜைன் தொகுதி பாஜ எம்எல்ஏ மோகன் யாதவை தொடர்பு கொண்டு தனக்கு உதவும்படி கூறினார். அவரிடம் தான் பாஜ தலைவர் அமித்ஷாவின் மருமகன் என்றும், ரயிலில் ஏசி கோச்சில் பேக்கை தொலைத்து விட்டதாகவும் கூறினார். மோகன் யாதவ் உடனடியாக தனது உதவியாளர் நரேஷ் சர்மாவை உஜ்ஜைன் காவல் நிலையத்திற்கு அனுப்பி, அந்த மர்ம நபரை அழைத்து வரச் செய்தார். உடனடியாக உயர் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேக்கை கண்டுபிடித்து தர உத்தரவிட்டுள்ளார்.
பின்னர், அந்த வாலிபருக்கு ராஜ உபசாரம் செய்தார். ‘‘அமித்ஷாவின் மருமகனாயிற்றே... ஆளை பிடித்தால் பின்னாளில் பெரிய பதவிகளை வாங்கி விடலாமே...’’ என்று மனக்கோட்டை கட்டிய எம்எல்ஏ, அந்த நபருக்கு ரூ.50 ஆயிரமும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புதிய மொபைல் போனையும் வாங்கி கொடுத்தார். உஜ்ஜைன் கோயிலில் மகாகால தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்தார். அது மட்டுமின்றி, அகமதாபாத் செல்வதற்கான விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்தார். அனைத்தையும் அனுபவித்த வாலிபர், எம்எல்ஏவிடம் விடைபெற்று சென்றார்.
அந்த வாலிபர் சென்ற பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர் புகாரில் குறிப்பிட்டிருந்த ரயிலில் அவரது சீட் எண்ணில் ஒரு பெண் பயணமானது தெரிய வந்தது. இவர் அந்த ரயிலில் வரவே இல்ைல என்பதும், பேக் தொலைத்தது எல்லாம் கட்டுக்கதை என்பதும் தெரிய வந்தது. இதன்பின், அவரை பற்றி மற்ற மாநிலங்களிலும் விசாரித்தனர். விசாரணையில், இதே போன்று அந்த ஆசாமி ராஜஸ்தானிலும் கட்டுக்கதை விட்டு அங்குள்ள எம்எல்ஏ ஒருவரிடம் ஏமாற்றியிருப்பது தெரிந்தது. தற்போது அந்த கில்லாடி ஆசாமியை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.