ராஜேந்திர சோழன் பிறந்த நாளையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 31ல் மகாபிஷேகம்
7/29/2016 3:44:05 PM
ஜெயங்கொண்டம், -அரியலூர் மாவட்டம் ஜெயங்ெகாண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு கங்கை முதல் கடாரம் வரை வென்று ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். உலக பிரசித்தி பெற்ற உலக புராதன சின்னமான பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள பதிமூன்றரை அடி உயரம், அறுபது அடி சுற்றளவு கொண்ட பிரகதீஸ்வரர் லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கிறது.2014ம் ஆண்டிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தால் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இந்தாண்டு ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரமான வரும் 31ம் தேதி வருகிறது.இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகம் நடைபெறும். திரவியபொடி, மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பலவகையான அபிஷேகங்கள் நடக்கிறது. அன்று மதியம் அன்னதானம் நடக்கிறது.