வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் நடுரோட்டிலேயே போலீஸ் அராஜகம்
7/29/2016 3:41:51 PM
திருவண்ணாமலை, -திருவண்ணாமலை- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் நாள்தோறும் லாரி, சரக்கு வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்கள் போன்றவற்றால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக புகார் வந்தது. இதை தடுக்க`தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம் ஷிப்ட்’ முறையில் 24மணி நேரமும் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ரோந்து வாகனத்திலும் தலா ஒரு எஸ்ஐ தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் திருட்டு, வழிப்பறி குற்றங்கள் அல்லது வாகன விபத்து நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டியது இவர்களின் பணியாகும்.
மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகளின் எல்லைக்குள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், லஞ்ச வேட்டையில் ஈடுபடுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை ஏந்தல் அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அவ்வழியாக வந்த கனரக வாகனங்கள், லாரிகள், லோடு ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களையும் திடீர் திடீரென வழிமறித்து லஞ்சம் வசூலித்தனர். இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
போலீசார் லஞ்சம் வசூலிப்பதை அறிந்த சில டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றுவிட்டனர்.இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தங்களது கடமையை சரிவர செய்கிறார்களோ இல்லையோ, தினமும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வசூலிப்பதை மட்டும் தலையாய கடமையாக செய்து வருகின்றனர். சில டிரைவர்கள் போலீசார் லஞ்சம் வசூலிப்பதை பார்த்தால் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. குற்றச்செயல்களை தடுக்க வேண்டிய போலீசாரே குற்றம் செய்ய தூண்டுவதுபோல் உள்ளது இச்செயல்’ என்று வேதனை தெரிவித்தனர். இவ்வாறு செயல்படும் லஞ்ச போலீசாருக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.