கேளம்பாக்கம் அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு ஐடி இன்ஜினியர் கடத்தல்
7/29/2016 3:16:53 PM
திருப்போரூர், -தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், சித்தராமபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் பிரேம்குமார் (28). இவர் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவர் கேளம்பாக்கம், ரேணுகாம்பாள் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு, நேற்று அதிகாலை 2 மணியளவில் பணி முடிந்து வெளியே வந்தார். அவ்வழியாக வந்த ஒரு டூவீலரில் லிப்ட் கேட்டு பிரேம்குமார் ஏறினார். அவருடன் மற்றொருவரும் ஏறினார்.
இவர்கள் நாவலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் பின்னால் அமர்ந்திருந்த நபர் பிரேம்குமார் முகத்தில் மயக்கமருந்து தெளித்த கர்சீப்பை வைத்து அழுத்தினார். இதில் பிரேம்குமார் மயக்கமானதும் அவரை அங்கிருந்து ஒரு காரில் கடத்தி சென்றுவிட்டனர்.இந்நிலையில், நேற்று காலை பிரேம்குமாருடன் அறையில் தங்கியிருந்த சந்தீப் என்பவருக்கும் தெலங்கானா மாநிலத்தில் வசிக்கும் பிரேம்குமாரின் தாயார் அருணாவுக்கும் வெளிநாட்டு சிம்கார்டு மூலம் கடத்தல்காரர்கள் போன் செய்து, பிரேம்குமாரை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ₹1 கோடி தரவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பிரேம்குமாரின் தந்தை தேவராஜ், தாய் அருணா ஆகியோர் நேற்று சென்னைக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் கடத்தல்காரர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று மாலை 6 மணியளவில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பின்னர் இந்த புகார் தாழம்பூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், எஸ்பி முத்தரசி, மாமல்லபுரம் டிஎஸ்பி சேகர் ஆகியோர் மேற்பார்வையில் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.பிரேம்குமாரின் பெற்றோரிடம் கடத்தல்காரர்கள் பேரம் பேசத் தொடங்கினர். முதலில் ₹1 கோடி கேட்ட கடத்தல்காரர்கள் பின்னர் ₹50 லட்சம், ₹25 லட்சம் என இறங்கி, கடைசியாக ₹10 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓஎம்ஆர் சாலையில் ஒரு இடத்துக்கு வருமாறு பிரேம்குமாரின் தாய் அருணாவிடம் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவருடன் நேற்றிரவு 11 மணியளவில் மாறுவேடத்தில் போலீசாரும் உடன் சென்றனர். எனினும், அங்கு கடத்தல்காரர்கள் யாரும் வரவில்லை. பின்னர் அருணாவை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், ‘ஈசிஆர் ேராட்டில் உள்ள கோவளத்துக்கு வருமாறு கூறினர். அவர் அங்கு சென்றதும், அங்கிருந்து அவரை தனியே செம்மஞ்சேரிக்கு நடந்து வரும்படி கடத்தல்காரர்கள் கூறினர்.அருணாவும் ₹10 லட்சம் பணத்துடன் நள்ளிரவு 12 மணியளவில் செம்மஞ்சேரி பகுதியில் நடந்து சென்றார். அவரை போலீசாரும் மாறுவேடத்தில் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது ஹெல்மெட் அணிந்த ஒரு வாலிபர் அருணாவின் கையில் இருந்த பணப்பையைப் பறிக்க முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.பிடிபட்ட வாலிபரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், தையூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரேம்குமார் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் போலீசார் விரைந்து சென்று, அறைக்குள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் பிரேம்குமாரை மீட்டனர்.
அங்கு பிரேம்குமாரை அடைத்து வைத்திருந்த தையூர் பெரியமாநகரை சேர்ந்த பார்த்திபன் (23), ஜெயசீலன் (28), கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் பாலாஜி (27), அரக்கோணத்தை சேர்ந்த விவேக்ராஜ் (27) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, 4 செல்போன்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 4 பேரிடமும் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு செல்போன்
சிம்கார்டுகள் கிடைத்தது எப்படி?
இந்த கடத்தலில் பிடிபட்ட 4 பேரின் செல்போன்களிலும் வெளிநாட்டு சிம்கார்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. அவர்கள் எந்த நிறுவன செல்போன் நம்பரில் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. இந்த சம்பவத்திலும் அவர்கள் எந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை போலீசார் ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த நம்பர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒரு பகுதியில் தொடர்பு கொள்ளப்பட்டதை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அவர்களுக்கு எப்படி வெளிநாட்டு சிம்கார்டுகள் கிடைத்தன, இதுபோல் எத்தனை பேரை கடத்தி கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பதை தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.