சபாநாயகர் தீர்ப்பு சொல்ல மறுத்ததால் சட்டசபையை புறக்கணித்தது திமுக - காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளும் வெளிநடப்பு
7/29/2016 3:13:38 PM
சென்னை, -சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது பற்றி சபாநாயகர் தனபால் தனது தீர்ப்பை வெளியிட மறுத்ததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று சட்டசபையை புறக்கணித்து வெளியேறினர். சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திமுக ஆட்சியில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டு குற்றம்சாட்டினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென்று திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். அப்போது அமைச்சர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதமாகி கடும் அமளி ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காவிட்டால், நிதியமைச்சரின் பதிலுரையை நாங்கள் புறக்கணிப்போம்’’ என்றார். இதன்பின், சபாநாயகர் தனபால் கூறுகையில், ‘‘அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை நான் ஆய்வு செய்து அது அவைக்குறிப்பில் இடம் பெறுமா என்பது குறித்து நாளை தீர்ப்பு கூறுகிறேன். அது வரை பத்திரிகைகளில் அவர் பேசியதை வெளியிடக் கூடாது என உத்தரவிடுகிறேன்’’ என்றார்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் தனபால் வழக்கம் போல் திருக்குறள் வாசித்தார். இதன்பின், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து சபாநாயகரிடம், ‘‘அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென்று நேற்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதை படித்து பார்த்து இன்று நல்ல தீர்ப்பு கூறுவதாக அறிவித்திருந்தீர்கள். எனவே, தங்களின் தீர்ப்பை கூற வேண்டும்’’ என்றார்.
சபாநாயகர்: நாளை தீர்ப்பு கூறுகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். இப்போதே தீர்ப்பு கூற வேண்டுமென்று என்னை வற்புறுத்தக் கூடாது. நான் பிறகு தீர்ப்பு சொல்வேன். அவையை நடத்த விடுங்கள்.
ஸ்டாலின் : ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜூ, ஈரோடு தென்னரசு ஆகியோர் பேசிய சில கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முன்பு வலியுறுத்தினோம். அவற்றுக்கே நீங்கள் இது வரை தீர்ப்பு ெசால்லவில்லை. எனவே, நாங்கள் தொடர்ந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமெனில், தாங்கள் இப்போதே தீர்ப்பு கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
சபாநாயகர் : நான் இன்று கண்டிப்பாக எனது தீர்ப்பை சொல்வேன். ஆனால், இப்போதுதான் சொல்ல வேண்டுமென்று என்னை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது.
ஸ்டாலின் : அமைச்சரின் பேச்சை நீக்குவீர்களா, இல்லையா என்பதை பொறுத்துதான் நாங்கள் முடிவெடுப்போம் என்று நேற்றே சொன்னோம். நிதியமைச்சரின் பதிலுரையை புறக்கணிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாம். மீண்டும் நேற்று போல் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகவே வலியுறுத்துகிறோம்.
சபாநாயகர் : என்னை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது. அவையை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
துரைமுருகன் : நீங்கள் நல்ல தீர்ப்பு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்று அவைக்கு வந்திருக்கிறோம். ஆனால், நீங்கள் தீர்ப்பு சொல்ல மறுப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
(இவ்வாறு விவாதம் ஓடிக் கொண்டிருக்கும் போது சரியாக 10.08 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, அவைக்குள் வந்தார். உடனே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். திமுக உறுப்பினர்களும் ஸ்டாலினுக்கு ஆதரவாக ஏற்கனவே எழுந்து நின்றிருந்தனர். முதல்வர் தனது இருக்கையில் அமர்ந்ததும் ஸ்டாலின் பேசினார்)
ஸ்டாலின் : நாங்கள் நேற்று விடுத்த கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் இன்று நல்ல தீர்ப்பு தருவார் என எதிர்பார்த்து வந்தோம். ஆனால், சபாநாயகர் தீர்ப்பு சொல்ல மறுப்பதால், நாங்கள் நிதியமைச்சரின் பதிலுரையை புறக்கணிக்கிறோம்.
இதன்பின்னர், ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.