டாக்டர் மகனை கடத்திய வாலிபர் கைது - திருப்பூரில் இன்று பரபரப்பு
7/28/2016 5:37:27 PM
திருப்பூர், -திருப்பூர் ஓடக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமார். இவருக்கு ஆரியநரசிம்மன் (6) என்ற மகனும், தீபா (8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பழங்கரை பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணிக்கு, பள்ளிக்கு சொந்தமான வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். ேவனில் இருந்து இறங்கியபோது, இவர்களை பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள், ஆரியநரசிம்மனிடம், உனது தந்தை அழைத்து வரச்ெசான்னார் எனக்கூறி டூவீலரில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மாணவனை காருக்கு மாற்றி அழைத்து சென்றனர்.
காரில் மாணவனுடன் ஒருவர் மட்டும் சென்றுள்ளார். பின்னால் ஒரு கும்பல் காரில் சென்றது.சிறிது நேரத்தில் ஆரியநரசிம்மன் பள்ளிக்கு வரவில்லை என டாக்டர் செந்தில்குமாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், ஆய்வு செய்தபோது, வீட்டிற்கு முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில், ஆசாமி ஒருவன், பள்ளி வேனை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்வது தெரிய வந்தது.
இதையடுத்து, உஷார் அடைந்த போலீசார், மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் உள்ள போலீசாருக்கு, மாணவனின் புகைப்படத்தை அனுப்பி தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் தாராபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தியபோது, கார் ஒன்றில் சிறுவன் இருப்பதை கண்டனர். போலீசார் காரை ஓட்டிய நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஆரியநரசிம்மனை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
கடத்தலில் ஈடுபட்டது தேனி மாவட்டம் நரசிங்காபுரத்தை சேர்ந்த தேவராஜ்(23) என்பதும், இவர் டாக்டர் செந்தில்குமாரின் மருத்துவமனையில் முன்பு வேலை செய்தவர் என்றும் தெரியவந்தது.தேவராஜ் போலீசிடம் சிக்கியதும், காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல் தப்பிவிட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாணவன் ஆரியநரசிம்மனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். எதற்காக அவனை கடத்தினர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.