நெல்லை அருகே இன்று அதிகாலை கோர விபத்து - லாரி-ஆம்னி வேன் மோதல்: 6 பேர் உடல் நசுங்கி பலிகுற்றாலம் சென்று விட்டு திரும்பிய போது சோகம்
7/28/2016 4:44:12 PM
ஆலங்குளம், -நெல்லை அருகே இன்று அதிகாலை கன்டெய்னர் லாரியுடன் ஆம்னி வேன் நேருக்குநேர் மோதியதில் 6 பேர் உடல்நசுங்கி இறந்தனர். குற்றாலம் சென்று விட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த உலகநாதன், பாரதிநகர் ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரியை சேர்ந்த முத்தையா மகன் முருகன் அதே ஊரை சேர்ந்த மற்றொரு முருகன், கடையனோடையைச் சேர்ந்த சங்கர்பாஸ் (33). ஆறுமுகநேரி தனியார் நிறுவன காவலாளி முத்துக்கருப்பன் ஆகிய 6 பேரும் நண்பர்கள்.
இவர்களில் உலகநாதன் உப்பள கான்ட்ராக்டராக இருந்தார். ராதாகிருஷ்ணன் ஆம்னி பஸ் டிரைவராகவும், முத்தையா மகன் முருகன் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் ஆலையிலும் வேலை பார்த்து வந்தனர். நேற்று உலகநாதன் உள்ளிட்ட 6 பேரும் ஆம்னி வேனில் குற்றாலம் சென்றனர். அங்கு மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நன்றாக குளித்து மகிழ்ந்த அவர்கள், இன்று அதிகாலை 12.15 மணியளவில் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
காரை சங்கர்பாஸ் ஓட்டி வந்தார். ஒன்றரை மணியளவில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூர் அடுத்த வெள்ளான்குளம் விலக்கு அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு முந்திரி பருப்பு லோடு ஏற்றிய கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. 2 வாகனங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி கார் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த உலகநாதன் உள்ளிட்ட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
தகவல் அறிந்து ஆலங்குளம் டிஎஸ்பி சங்கு, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் சுப்புராஜ் என்பவர் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து குறித்து கன்டெய்னர் லாரி டிரைவர் சுப்புராஜ் கூறும்போது, நான் தூத்துக்குடியில் இருந்து முந்திரி பருப்பு லோடு ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தேன். சீதபற்பநல்லூர் அடுத்த வெள்ளான்குளம் விலக்கு அருகே வரும் போது எதிரே ஆம்னி கார் வேகமாக வந்தது. இதனைப்பார்த்த நான், லாரியை ஓரம் கட்டினேன். ஆனாலும் கார் வேகமாக வந்து லாரியுடன் நேருக்குநேர் மோதிவிட்டது என்றார்.
மரண ஓலம்
விபத்தில் 6 பேர் இறந்தது குறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அதிகாலையிலேயே பஸ் மற்றும் கார்களை பிடித்து திரண்டு வந்தனர். அவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவாரி முன்பு நின்று கதறி அழுதனர். இதனால் அதிகாலையிலேயே மருத்துவமனை வளாகத்தில் மரண ஓலமாக இருந்தது.
குளறுபடி ஏற்படுத்திய லைசென்ஸ்
விபத்தில் இறந்த சங்கர்பாசின் சட்டை பையில் அழகப்பன், தந்தை பெயர் ஆறுமுகநயினார், குலசேகரன்பட்டினம் என்ற முகவரியில் டிரைவிங் லைசென்ஸ் இருந்தது. இதனால் விபத்தில் இறந்தவர் அழகப்பனாக இருக்கலாம் எனக்கருதி போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே அழகப்பன் உயிரோடு இருப்பதும், அவரது டிரைவிங் லைசென்சை சங்கர்பாஸ் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.