ஆவடி அருகே துணிகரம் - ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 22 சவரன் கொள்ளை
7/28/2016 4:42:54 PM
ஆவடி, -ஆவடி அருகே ஆரிக்கம்பேடு, அன்பு நகர், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (45). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி மஞ்சுளா (35). இத்தம்பதிக்கு பிரசாந்த் (17) என்ற மகனும், சந்தியா (14) என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவரும் நேற்றிரவு 8.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆடி கிருத்திகை விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் சாமி தரிசனம் முடிந்து, இன்று அதிகாலை 5 மணியளவில் தெய்வசிகாமணி தனது குடும்பத்துடன் வீட்டுக்குத் திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தெய்வசிகாமணி குடும்பத்துடன் உள்ளே சென்று பார்த்தார்.அவரது வீட்டின் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் கீழே சிதறி கிடந்தன. மேலும், பீரோ லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 22 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் தெய்வசிகாமணி புகார் செய்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மேலும், அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டு பீரோ மற்றும் கதவுகளில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.இச்சம்பவம் ஆரிக்கம்பேடு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.