மகாராஷ்டிராவில் உட்கட்சி பூசல்: காங். அதிருப்தியாளர்களுக்கு ராகுல் கடும் எச்சரிக்கை
7/10/2025 2:57:23 PM
புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உட்கட்சி பூசலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜ- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜ கூட்டணியில் சிவசேனா முரண்டு பிடித்து வருகிறது. இந்நிலையில், பாஜவும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டுமென கட்சி மேலிடம் எதிர்பார்க்கிறது. ஆனால், தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. மாநில பொது செயலாளர் குருதாஸ் காமத் தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி தராததால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார். அதன்பின், அவரை சமாதானப்படுத்தினர். மாநில தலைவர் சஞ்சய் நிருபம், மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் ஆகியோரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்களை, துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று அழைத்து பேசினார். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர். அதிருப்தியில் இருந்த குருதாஸ் காமத் உள்ளிட்டோரை சமாதானப்படுத்தினார். அதே சமயம், உள்கட்சி பூசலில் ஈடுபடுவோர், கட்சியை பிளவுபடுத்த நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
மேலும், பாஜவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், இருகட்சிகளும் தனித்தனியே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. இதை பயன்படுத்தி கொண்டு அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு காங்கிரசார் ஒற்றுமையாக திட்டமிட வேண்டும் என ராகுல் அறிவுரை வழங்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.