விழுப்புரம் லாட்ஜில் போலீஸ்காரர் மர்ம சாவு - உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா?
7/9/2025 1:38:54 PM
விழுப்புரம், -விழுப்புரம் அடுத்த வி.மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (40). திருமணமானவர். இவர் ஏற்கனவே விழுப்புரம் காவல்துறை சைபர்கிரைம் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து வருவதாகவும், வாக்கிங் சென்று விட்டு வருகிறேன் என விடுதி ஊழியர்களிடம் கூறினாராம். பின்னர் அறை சாவியை விடுதி வரவேற்பறையில் கொடுத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
நேற்று மதியம் 1 மணி அளவில் கையில் வாட்டர் பாட்டில், மது பாட்டில், உணவு பொட்டலம் ஆகியவற்றுடன் வந்த நாகராஜ் தனது அறைக்கு சென்று பூட்டிக்கொண்டார். ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. டிவி சத்தம் அதிகமாக கேட்டது. இன்று காலை 7 மணி அளவில் அறைக்கதவு திறக்கப்படாததால் ஊழியர் சந்திரசேகர் என்பவர் கதவை தட்டியள்ளார். ஆனால் பதில் இல்லை. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது படுக்கையில் நாகராஜ் பிணமாக கிடந்தார். அருகில் விஷபாட்டில் கிடந்தது. சிரிஞ்ச் ஒன்றும் கிடந்தது. எனவே விஷத்தை உடலிலும் செலுத்தி, குடித்தும் உள்ளதாக தெரிகிறது.
தகவல் அறிந்ததும் தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ்காரர் நாகராஜ் இறப்புக்கு காரணம் குடும்ப பிரச்னையா? உயர் அதிகாரிகள் டார்ச்சரா? பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.