செங்குன்றம் அருகே பான் குட்கா குடோன்களில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு
7/9/2025 1:29:22 PM
புழல், - சென்னை செங்குன்றம் அருகே தீர்த்தங்கரைப்பட்டு, சோத்துப்பாக்கம் சாலை மற்றும் கோட்டூர் செல்லும் சாலையில் உள்ள 2 பான் குட்கா குடோன்களிலும் இன்று 2-வது நாளாக வருமானவரி துறை அதிகாரிகளும், போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் நேற்று மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள பான்மசாலா, குட்கா நிறுவனங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ₹64 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவை அனைத்தும் முக்கிய அரசியல் பிரமுகருக்கான நிறுவனம் என்பதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அதிகாரிகளின் துணையுடன் சென்னை அருகே போதை பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.அவர்கள் அரசுக்கு கணக்கு காட்டாமல், முறைகேடான வகையில் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதால், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளன. இப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் நிறுவனங்கள், இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக வருமானவரி துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனால் சென்னை மண்டல வருமானவரி துறை இயக்குநர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருமானவரி துறை அதிகாரிகள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, நேற்று காலை 8.30 மணியளவில் செங்குன்றம் அருகே தீர்த்தங்கரைப்பட்டு, சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள எம்டிஎம் என்ற பெயரில் இயங்கும் குடோனிலும், மாதவரம் அருகே மற்றொரு குடோனிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இன்று 2-வது நாளாக இந்த 2 குடோன்களிலும் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் குடோன்களையும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த குடோன்களில் நடைபெறும் சோதனையில் பிடிபட்டவை குறித்து இன்று மாலை விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.