₹2 கோடி மோசடி வழக்கில் கணவர் கைதான அதிர்ச்சியில் மனைவி, 2 மகள்கள் தற்கொலை - சென்னையில் பரிதாபம்
7/9/2025 1:26:42 PM
சென்னை, -ரூ.2 கோடி மோசடி வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த மனைவி, 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் இந்த பரிதாப சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள சேத்தியாதோப்பைச் சேர்ந்தவர் தேவராஜன் (64). மனைவி உஷா ராணி(55), மகள்கள் வாணி (29), விஜயலட்சுமி (27), மகன் சிவபாலன் (24). தேவராஜன் இந்து அறநிலையத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு வர வேண்டிய பிடித்தம் மற்றும் ஓய்வு பணப் பலன்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால், குடும்பம் வறுமையில் இருந்தது.
மகள்கள் வாணி, விஜயலட்சுமி இருவரும் எம்ஏ, எம்பில் முடித்து விட்டு பிஎச்டி பட்டமும் பெற்றிருந்தனர். குடும்ப வறுமையால், வேலை தேடி வந்தனர். வேலை கிடைக்கவில்லை. இருவருக்கும் திருமணமாகவில்லை. மகன் சிவபாலன் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவருக்கு சரியாக பேச்சும் வராது.
இந்தநிலையில், கடந்த 3ம் தேதி கடலூர் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கில் தேவராஜனை கைது செய்தனர். சிதம்பரத்தைச் சேர்ந்த சிலரிடம் மனோகரன் என்பவர், மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.2 கோடி வரை பணம் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை மனோகரன், தேவராஜனிடம் கொடுத்துள்ளார். தேவராஜன் மேலும் 2 பேரிடம் கொடுத்து வேலை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். இதற்காக தேவராஜனுக்கு கமிஷன் கிடைத்தது.ஆனால் சொன்னபடி மின்வாரியத்தில் வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இதனால் கடந்த 3ம் தேதி போலீசார் தேவராஜனை கைது செய்தனர். இதையடுத்து, ஊரில் இருந்தால் உறவினர்கள் மற்றும் பணம் கொடுத்தவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிப்பதுபோல வந்து கேட்டபடி இருந்தனர். இதனால் மனமுடைந்த உஷாராணி, தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் சென்னை எம்ஜிஆர் நகர் அழகிரி தெருவில் வசிக்கும் தன்னுடைய தங்கையின் வீட்டுக்கு வந்தார். வீட்டின் மாடியில் ஒரு அறையில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
வந்த நாள் முதல் அவர்கள் 4 பேருமே சரியாக சாப்பிடாமல் மனமுடைந்து காணப்பட்டனர். தனியாகவே இருந்தனர். யாரிடமும் பேசவில்லை. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். சரி வழக்கம்போல பேசுகிறார்கள் என்று அவரது சகோதரி நினைத்தார். இன்று காலையில் சகோதரியின் கணவர் திருநாவுக்கரசு, மாடிக்குச் சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தார்.இதனால் எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் தேவராஜ், விரைந்து சென்று கதவை உடைந்து உள்ளே சென்றார். வீட்டினுள் உள்ள உத்திரத்தில் துப்பட்டாவால் 3 பேரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர். போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தரையில் மனநிலை பாதிக்கப்பட்ட சிவபாலன் ஒன்றும் அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் எழுந்த பிறகு என்ன நடந்தது என்பதைக் கூட அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.