சிகிச்சைகளுக்கு நிதியுதவி ரூ.7.5 லட்சம் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு: ஜெயலலிதா உத்தரவு
7/7/2025 3:28:02 PM
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்
செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு நிதியுதவி
ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள
அறிக்கை: 2012ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா
காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசு பணியாளர்களுக்காக செயல்படுத்தப்பட்டு
வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது.
எனவே, 1.7.2025 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை சில கூடுதல் பயன்களுடன்
செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில்,
திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையைப் பின்பற்றி, பொதுத் துறை காப்பீட்டு
நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது.
ஒப்பந்தப்
புள்ளியை ஏற்கும் குழு பரிசீலித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு
நிறுவனத்தை மீண்டும் தேர்வு செய்துள்ளது. 1.7.2025 முதல் 30.6.2020
வரையிலான காலத்திற்கு அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக்
காப்பீட்டுத் திட்டத்தினை இந்நிறுவனம் மூலம் செயல்படுத்திட முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில்
உள்ள காப்பீட்டுத் திட்டத்தை விட இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் சில
கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது. இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு
அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என
தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், புற்று நோய், உறுப்பு
மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு
அனுமதிக்கப்படும் நிதியுதவி, ரூ.7.50 லட்சமாக உயர்த்தி
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள,
குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள், எவ்வித வயது
வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன் பெறலாம். விபத்து காரணமாக
இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக
அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர்
பயன்பெறவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்
அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும்
சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின்
பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக்
காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.
இந்த மருத்துவக்
காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180/-
ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம்
ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்தத்
திட்டத்தின் மூலம் சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும்
அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.