அரவிந்த்சாமி போலீஸ் இல்லை... வில்லன்தான்
7/4/2025 2:44:03 PM
வில்லனாக அறிமுகமான நடிகர்கள் பின்னர் ஹீரோவாகி இருக்கிறார்கள். ஆனால் ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்தால் அடுத்து நிரந்தர வில்லன் நடிகர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுகிறது. ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஜெய்சங்கர் தொடங்கி இன்றைய அருண் விஜய்வரை இதுதான் நடக்கிறது. ‘ரோஜா’ பட ஹீரோ அரவிந்த்சாமிக்கும் இதுதான் நேர்ந்திருக்கிறது. நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தவர் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து ஹீரோ வாய்ப்பு மட்டுமே ஏற்பது என்ற முடிவில் இருந்தவருக்கு வந்த வாய்ப்புகள் அத்தனையும் ஸ்டைலான வில்லன் வேடங்கள்தான்.தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் ‘தனி ஒருவன்’ ரீமேக்கில் வில்லனாக நடிக்க அழைத்தபோது மறுத்துப்பார்த்தார். பிறகு பெரிய சம்பளம் தருவதாக கூறியதையடுத்து வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் ஜெயம் ரவியுடன் மீண்டும் ‘போகன்’ படத்தில் இணைந்தார்.அரவிந்த்சாமிக்கு என்ன வேடம் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்தது படக் குழு. திடீரென்று ரவி, அரவிந்த்சாமி இருவரும் போலீஸ் உடையில் இருப்பதுபோன்ற ஸ்டில் வெளியிட்டு இருவருமே போலீஸ் வேடத்தில் நடிப்பதுபோல் காட்டினர். ஆனால் அரவிந்த் சாமி போலீஸ் இல்லையாம். பெரும் செல்வந்தராக வில்லத்தனம் நிறைந்த பாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்கிறது பட தரப்பு.