வங்க கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்யும் சென்னையில் விடிய, விடிய சாரல்
6/27/2016 4:29:34 PM
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வழக்கத்துக்கு மாறாக கத்தரி தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயில் சுட்டெரித்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கிடையில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த மாதம் இறுதியில் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. கடந்த 10 நாட்களாக சென்ைனயில் மழை பெய்யாவிட்டாலும், வெயிலின் அளவு குறைந்து வெப்பம் தணியத் தொடங்கியது. இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதும் தமிழகத்திலும் மழை பெய்யத் தொடங்கியது.
அதன்படி தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவான அந்த காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஆந்திர கடலோரப்பகுதிக்கு நகர்ந்து சென்றது. இதனால் ஆந்திரா, தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது.
அதன்படி சென்னையில் நேற்றிரவு 7 மணி அளவில் தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, சென்ட்ரல், மந்தவெளி உள்ளிட்ட பல இடங்களில் சிறிது நேரம் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது மழை சாரல் விழுந்தது. இதனால் சென்னையில் நேற்று முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது.
அதிகபட்சமாக நேற்று வால்பாறையில் 23.4 மி.மீ, தளியில் 20 மிமீ, சென்னை நுங்ஙகம்பாக்கம் 10.8 மி.மீ, உதகையில் 3.4 மிமீ மழை பெய்துள்ளது.
திருவள்ளூர், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நடுவட்டம், திருவாலங்காட்டில் 10 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து சென்றதால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.