பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நாளை தொடக்கம்
6/23/2016 2:08:50 PM
சென்னை: பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது. முதல்நாளில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 524 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 9 இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் முதல் நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 3,812 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டது. மொத்த தகுதியான விண்ணப்பங்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண்கள் 80 ஆயிரத்து 910 பேர், பெண்கள் 50 ஆயிரத்து 272 பேர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 69 ஆயிரத்து 575 பேர்.
இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து நாளை முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது.முதல்நாளில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு நடக்கிறது. நாளை நடக்கும் விளையாட்டு பிரிவு கலந்தாய்வுக்கு 1807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 1519 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 25ம் தேதி மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கான கலந்தாய்வு நடக்கிறது.27ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 21ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக பல்கலை வளாகத்தில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவிகளுடன் வரும் பெற்றோர் அல்லது சகோதரிக்கு பல்கலையில் தங்கி கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.