குற்றாலத்தில் களை கட்டியது சீசன் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்
6/11/2025 12:01:36 PM
தென்காசி: குற்றாலத்தில் இன்று சாரல் இல்லாத நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். இந்த சீசன் காலத்தில் தண்ணீரை மெலிதாக தெளித்தது போன்று சாரல், இதமான தென்றல் காற்று, உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போன்று வெண்ணிறத்தில் கொட்டும் அருவிகள், மலை முழுவதும் நிறைந்து காணப்படும் பசுமையான தாவரங்கள், அவ்வப்போது வந்து செல்லும் இளம் மஞ்சள் வெயில் என அற்புதமான சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்குகிறது.
இதற்கு அத்தாட்சியாக ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சீசன் ெபருமளவு ஏமாற்றி விட்ட நிலையில் இந்த ஆண்டு சீசன் எதிர்பார்த்தது போன்று துவங்கிவிட்டது. கடந்த சில தினங்களாக சீசன் சூப்பராக உள்ளது.குற்றாலத்தில் நேற்று அவ்வப்போது சாரல் பெய்தது. இன்று காலையில் இதமான தென்றல் காற்று வீசியது. லேசான வெயில் காணப்படுகிறது. சாரல் இல்லை. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது.
ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் விழுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் மிகவும் குறைவாக கொட்டியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நிலையில் இந்த வாரம் விடுமுறை தினமான இன்று அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி விக்ரமன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், குற்றாலத்தில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தவிர ஒரு கம்பெனி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அருவி பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.திருடர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். போலீசார் பைக் மற்றும் வேன்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அருவிகளில் இரவில் குளிப்பவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.