ஆர்கே.பேட்டை அருகே கோஷ்டி மோதல் அரசு பள்ளிக்கு பூட்டு படிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
6/10/2025 2:21:16 PM
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே இரு தரப்பு மோதலால் அரசு பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஜனகராஜகுப்பம் ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் எம்.டி.தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 22 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் புதிதாக ஒரு தலைமை ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணிக்கு வந்தால், ஏற்கனவே பணியாற்றும் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பள்ளிக்கு பூட்டு போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக ஆர்.கே.பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியை குளோரி எலிசபெத், நேற்று முன்தினம் பள்ளியின் 2 பூட்டுகளையும் உடைத்து பள்ளிக்குள் நுழைந்தார். அங்கு 2 மாணவர்களுடன் பள்ளியில் இருந்தார். நேற்று 5 மாணவர்களுடன் தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்தார். ‘‘பிரச்னைக்கு தீர்வு காணும்வரை நீங்கள் பள்ளிக்கு வர கூடாது’’ என்று மாணவர்களின் பெற்றோர் கூறினர்.இதுபற்றி அறிந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘ பழைய மேலாளர் நியமித்த தலைமை ஆசிரியைதான் பள்ளிக்கு வர வேண்டும். புதிய மேலாளர் நியமித்த தலைமை ஆசிரியையை அனுமதிக்க கூடாது. பழைய மேலாளரும் புதிய மேலாளரும் பேசி தீர்வு காண வேண்டும்’’ என்று பொதுமக்கள் கூறினர். அவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ‘‘மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின்படி பள்ளி திறக்கட்டும். அதன்பிறகு பிரச்னையை பேசி தீர்த்து கொள்ளலாம்’’ என்றார். ஆனால், பழைய மேலாளர், பள்ளியை பூட்டிச்சென்றார்.
இதையடுத்து ஆர்.கே.பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கன் சம்பவ இடத்துக்கு வந்து, ‘‘ஏற்கெனவே பதனநகரத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் மற்றொரு பள்ளி கட்டிடத்தில் வகுப்பு நடைபெறும்’’ என கூறி விட்டு சென்றார். இதையடுத்து அங்கு சென்று, அந்த பள்ளியை இன்று திறக்க சென்றபோது, அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 5வது நாளாக பள்ளிகள் திறக்கப்படாதால் மாணவர்கள், பெற்றோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.