மீஞ்சூர் அருகே நகை, பணம் கொள்ளை கிரகப்பிரவேசத்தில் பரிசாக கிடைத்தவை
6/10/2025 2:20:47 PM
பொன்னேரி: மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு, வேணுகோபால் அவென்யூவை சேர்ந்தவர் தனகுரு (45). சொந்த வீட்டில் வசித்து வரும் தனகுரு, புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார். அதன் கிரகப்பிரவேச விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பரிசாக கிடைத்த நகை, பணம் மற்றும் பரிசு பொருட்களை பழைய வீட்டில் வைத்து, கதவை பூட்டிவிட்டு, தனது உறவினர்களுடன் புது வீட்டில் தூங்கினார்.நேற்று காலை புது வீட்டிலிருந்து தனகுரு எழுந்து வெளியே வர முயன்றார். அப்போது அவரது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனகுரு அலறி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் கதவை திறந்தனர். அனைவரும் பழைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது பழைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த மூன்றேமுக்கால் பவுன் தங்க நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து தனகுரு கொடுத்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.