ஷோ ரூமில் திருடப்பட்ட 7வது கார் மீட்பு டிராவல்ஸ் உரிமையாளருக்கு வலைவீச்சு
6/10/2025 2:19:30 PM
ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் திருட்டுப்போன 7வது புதிய காரையும் போலீசார் மீட்டுள்ளனர். இதுசம்பந்தமாக டிராவல்ஸ் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.சென்னை அருகே மணப்பாக்கத்தில் 7 புதிய சொகுசு கார்கள் திருடு போன விவகாரத்தில் மதுரவாயலில் நேற்று காலை ஒரு காரை போலீசார் மீட்டனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கோடம்பாக்கம் மேம்பாலம் அடியில் ஒரு சொகுசு கார் அனாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அது, மணப்பாக்கத்தில் திருட்டுப்போன கார் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக நந்தம்பாக்கம் போலீசார் சென்று, மேம்பாலத்தின்கீழ் நின்றிருந்த 7வது புதிய காரை மீட்டனர். பின்னர் அந்த காரை, நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த 7 கார்கள் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட வளசரவாக்கத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் செந்தில், ரமேஷ் ஆகியோரை பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.அத்துடன் கார் கடத்தல் கும்பலை வலைவீசி பிடிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் கல்யாண் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.இதற்கிடையில், கார் கொள்ளை சம்பவம் குறித்து 10க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். கார் திருட்டு கும்பல் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில்தான் உள்ளனர் என தெரியவந்துள்ளது.‘’ கார் கடத்தல் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்’’ என்று தனிப்படை போலீசார் கூறினர்.