5 நாடுகள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்
6/10/2025 2:18:34 PM
புதுடெல்லி: பிரதமர் மோடி 5 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார்.ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிஸ், அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய 5 நாடுகளுக்கு கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் டெல்லியில் உள்ள பாலம் ஏர்போர்ட்டில் இன்று காலை 5 மணிக்கு வந்திறங்கினார். அவரை பாஜ தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி தனது ஆப்கன் பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானியுடன் இணைந்து இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஆப்கன் இந்திய நல்லுறவு அணையை திறந்து வைத்தார். பின்னர் அஷ்ரப் கானியின் விருந்தில் பங்கேற்ற மோடி, ஆப்கனுடன் பல்வேறு ஒப்பந்தங்களை அஷ்ரப் கானியுடன் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது ஆப்கானின் உயரிய விருதும் மோடிக்கு வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து 4 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக கத்தார் சென்ற மோடி, இந்திய தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கும், அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் நேரடியாக சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கத்தார் நாட்டு மன்னரை சந்தித்து 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். மோடியின் பயணத்தையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 23 இந்திய கைதிகளை கத்தார் அரசு விடுதலை செய்தது.
பின்னர் அங்கு தனது பயணத்தை முடித்துக் கொண்டு 6ம் தேதி சுவிஸ் சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகன் ஸ்னைடர் அமானுடன் சுவிஸ் வங்கிகளில் இந்திய தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் பதுக்கியுள்ள கருப்பு பண விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் சர்வதேச அணு சக்தி வினியோக குழுவில் இந்தியா இடம் பெற சுவிஸ் அரசின் ஆதரவை கோரினார். பின்னர் அன்றைய தினமே அங்கிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்திய மற்றும் அமெரிக்க தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். மேலும் பாதுகாப்புத்துறை, அணுசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் மோடியும், ஒபாமாவும் ஒப்பந்தம் மேற்கொண்டனர். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமெரிக்க எம்பிக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்து.
பின்னர் அங்கிருந்து நேற்று மெக்சிகோ சென்ற பிரதமர் மோடி அணுசக்தி வினியோக குழுவில் இந்தியா இடம் பெற அந்நாட்டு அதிபர் என்ரிகோ பெனா நீட்டோவை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் பல்வேறு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. தனது மெக்சிகோ பயணம் குறித்து மோடி தனது டுவிட்டரில், இந்தியா மெக்சிகோ இடையிலான நல்லுறவின் மூலமாக நமது நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் மிகுந்த பயன் அளிக்கும். மெக்சிகோவுக்கு எனது நன்றி என ஸ்பானிஷ் மொழியில் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் 5 நாடுகள் பயணம் மிகவும் வெற்றி கரமாக அமைந்தது. தனது பயணத்தை முடித்துக் கொண்டு மோடி இன்று காலை டெல்லி திரும்பினார் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.