இமாச்சல பிரதேசத்தில் கனமழை : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணி
6/10/2025 2:17:22 PM
சிம்லா: இமாச்சலில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஆற்றின் கரையோரம், வனப்பகுதிகளில் தங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. இங்குள்ள இயற்கையான சூழல், அருவி, மலைகளை ரசிக்க வெளி, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. தெருக்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் ஏரிகளில் தண்ணீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. சூற்றைகாற்றால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன.
தலைநகர் சிம்லா அருகே உள்ள பூங்கா ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் முகாம் மீது மரம் விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இமாச்சல பிரதேசத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.நீர்நிலைகள், வனப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.