நம்பிக்கை ஓட்டெடுப்பில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ், பாஜ எம்எல்ஏ பதவி பறிப்பு உத்தரகண்ட் சபாநாயகர் அதிரடி
6/10/2025 2:16:48 PM
டேராடூன்: உத்தரகண்டில் காங்கிரஸ் மற்றும் பாஜ எம்எல்ஏக்கள் 2 பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.உத்தரகண்டில் முதல்வர் ஹரீஷ் ராவத் அரசுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஹரீஷ் ராவத் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி மாறி வாக்களித்த இரண்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் உத்தரவிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜ எம்எல்ஏ பீம்லால் ஆர்யா காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ ரேகா ஆர்யா பாஜவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.ஏற்கனவே காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் காங்கிரசின் பலம் 23 ஆக குறைந்திருந்தது. இந்த சூழலில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி மாறி வாக்களித்த மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் உத்தரகண்ட் அவையின் மொத்த எண்ணிக்கை 60 ஆக குறைந்துள்ளது. ரேகா ஆர்யா காங்கிரஸ் கொறாடா உத்தரவை மீறி வாக்களித்ததன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பாஜ எம்எல்ஏ பீம் லால் ஆர்யா ஏற்கனவே காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுவதாக சபாநாயகரிடம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பாஜ புகார் தெரிவித்திருந்தது. அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜ கோரியிருந்தது. இருப்பினும் தற்போது தான் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.