22ல் தரவரிசை பட்டியல் வெளியீடு இன்ஜினியரிங் கவுன்சலிங் ஜூன் 24ல் தொடக்கம் அண்ணா பல்கலை அறிவிப்பு
6/9/2025 4:10:04 PM
சென்னை: பிஇ, பி.டெக் உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் ஜூன் 24ம் தேதி தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள 538 இன்ஜினியரிங் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சம் அரசு இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 4ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. 2 லட்சத்து 53,113 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். அதில் 1 லட்சத்து 84,839 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். இறுதியாக 1 லட்சத்து 34,722 மாணவர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக வரும் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. அடுத்து, 22ம் தேதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணாப்பல்கலை வெளியிடுகிறது. முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. அதன்படி 24ம் தேதி விளையாட்டு ஒதுக்கீட்டில் கவுன்சலிங் நடக்கும். தொடர்ந்து 25ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சலிங் நடைபெறும்.
27ம் தேதி முதல் பொதுப்பிரிவு கவுன்சலிங் நடைபெறுவதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. கவுன்சலிங் அழைப்பு கடிதத்தை மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தனது டிஎன்இஏ 2016 பதிவு எண், பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆண்டு கவுன்சலிங்கிற்கு வரும் மாணவிகளுக்கு இரவில் தங்கும் விடுதி வசதியை அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மாணவிகள் தனது தாயார் அல்லது சகோதரியுடன் கவுன்சலிங்கிற்கு வந்தால் இரவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் தங்கி கொள்ளலாம். மாணவிகளுக்கு தங்கும் விடுதி வசதி செய்து கொடுப்பது இதுவே முதல் முறையாகும்.