ஓசூர் சர்வேயர் கொலை வழக்கு கூலிப்படை கும்பல் தலைவன் சிக்கினார் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை
6/9/2025 2:10:02 PM
சேலம்: ஓசூர் சர்வேயர் கொலை வழக்கில் கூலிப்படை கும்பல் தலைவன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி சர்வேயர் குவளை செழியனை (42), கடந்த 27ம் தேதி மர்மகும்பல் கடத்தியது. அவரது மனைவி ரேவதியிடம் ரூ.50லட்சம் பணம் கொடுத்தால் விடுவிப்பதாக அக்கும்பல் மிரட்டியது. இதனிடையே மறுநாள், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்திநகரில் காரில் எரிந்த நிலையில் சர்வேயர் குவளை செழியன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் சர்வேயர் குவளை செழியன் கடத்தி கொலைச் செய்யப் பட்டிருப்பது தெரிந்தது. ஓசூரை சேர்ந்த கள்ளக்காதலி கார்த்தியாயினி, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கூலிப்படையினர் 7 பேர் என மொத்தமாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இக்கொலையில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த இக்ரமுல்லா, ஓமலூர் கோட்டக்கவுண்டம் பட்டியை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் கலைவாணன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். டிஎஸ்பி திருமால் அழகு தலைமையிலான தனிப்படையினர், இக்ரமுல்லாவையும், கலைவாணனையும் பிடிக்க சென்னை, கோவை, டெல்லிக்கு விரைந்துச் சென்றனர்.ஆங்காங்கே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தநிலையில், கூலிப்படை கும்பல் தலைவன் கலைவாணன் போலீஸ் பிடியில் சிக்கினார். இவர், மக்கள் தேசம் கட்சியின் மண்டல இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ளார். பிடிப்பட்ட கலைவாணனிடம் போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இக்ரமுல்லாவுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது?, சர்வேயரை கடத்திக் கொலை செய்ய காரணம் என்ன?, கூலிப்படையாக செயல்பட பணம் எவ்வளவு பெறப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முக்கிய குற்றவாளி இக்ரமுல்லாவை தேடி வரும்நிலையில், கிச்சிப்பாளைத்தை சேர்ந்த கூலிப்படைக்கு தலைவனாக செயல்பட்ட கலைவாணன் போலீசில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.