இறுதி சடங்கு ஏற்பாடுகள் தீவிரம் முகமது அலி எப்போதும் லூயிஸ்வில்லியன் நகர மேயர் உருக்கம்
6/8/2025 2:45:24 PM
லூயிஸ்வில்லி: குத்துச்சண்டை உலகின் ஜாம்பவானான அமெரிக்காவை சேர்ந்த முகமது அலி, பீனிக்ஸ் நகர மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி காலமானார்.இதையடுத்து கென்டகி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. முகமது அலியின் இறுதி சடங்கு நாளை மறு நாள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை லூயிஸ்வில்லி நகர நிர்வாகமும், போலீசாரும் தீவிரமாக செய்து வருகின்றனர்.இதன்படி முகமது அலியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள், அந்த நேரத்தில் மூடப்படும் சாலைகள், வாகன பார்க்கிங் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை எனவும், அதற்கு பதிலாக அவரது உயர்மட்ட ஆலோசகர் வலிரியா ஜேரெட் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது அலியின் மனைவி லூனியிடம், ஒபாமா தொலைபேசியில் பேசி, இரங்கல் தெரிவித்தார். இறுதி சடங்கு குறித்து லூயிஸ்வில்லி நகர மேயர் பிஸ்ஸர் கூறுகையில்,
இந்த உலகம் லூயிஸ்வில்லி நகரை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இந்த உலகமே எங்களது நகருக்கு வரவுள்ளது. முகமது அலியின் இறுதி சடங்கில் பங்கேற்க இங்கு வரவுள்ள தேச, சர்வதேச முக்கிய பிரமுகர்கள், தலைவர்களை வரவேற்கிறோம். முகமது அலி எப்போதும் லூயிஸ்வில்லியன்தான். லூயிஸ்வில்லியில் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என முகமது அலி விரும்பினார் என்றார்.இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதவர்களுக்காக, இந்நிகழ்ச்சிகள் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அங்கு வருகை தர உள்ள பொது மக்களுக்கு உதவி செய்வதற்காக, 1000க்கும் ேமற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஐ யம் அலி என்ற வாசகத்துடன் கூடிய ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிற டி-சர்ட்டுகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்.