மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு
5/26/2016 2:25:48 PM
கொல்கத்தா:மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில், 211 தொகுதிகளை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸ் 44, கம்யூனிஸ்ட்கள் 32, பாஜ 3 தொகுதிகளில் வெற்றிபெற்றன. திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றதை அடுத்து, மம்தா பானர்ஜி 2வது முறையாக முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். புதிய அரசு அமையவுள்ள நிலையில், மம்தா பானர்ஜி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் நேற்று கொடுத்தார். இதையடுத்து, சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வராக நாளை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. தற்காலிக சபாநாயகர், அமைச்சர்கள் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகிறது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் இந்தமுறை முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை இருக்கும் என கூறப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் அதிகளவில் இருக்கும் என தெரிகிறது.
நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர்கள் அகிலேஷ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழா வழக்கமாக கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிலையில், தற்போது பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கொல்கத்தாவில் உள்ள ரெட் ரோடு பகுதியில் பதவியேற்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.