திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஆப்ஸ்: குழாய் மூலம் நெய் கொண்டு செல்ல ஏற்பாடு
5/25/2016 5:08:14 PM
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை செயல் அலுவலர் சாம்பசிவ ராவ் கூறினார். திருப்பதி அன்னமய்யா பவனில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களின் நலன்கருதி திருமலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காம்ப்ளக்ஸ்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உடமைகள் பாதுகாக்கும் லாக்கர்கள் மற்றும் ஓய்வெடுக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காம்ப்ளக்ஸ்கள் மலைப்பாதையில் நடந்துவரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்பட வேண்டும். இதற்கான இடங்களை ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பக்தர்கள் தங்கும் விடுதிகள் பயன்பாட்டின் சதவீதத்தை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி 6, 12, 18, 24 மணி என 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை பக்தர்களின் பயன்பாட்டை பதிவு செய்ய வேண்டும். இதற்கான புதிய ‘ஆப்ஸ்’ தயாரிக்க வேண்டும்.
கோயில் உள்ளே தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்துக்கு தேவையான நெய் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இருந்து தேவஸ்தான ஊழியர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பயன்பாட்டு நேரங்களை குறைக்கும் வகையில் கிடங்குகளில் இருந்து நேரடியாக பைப் லைன் வழியாக லட்டு தயாரிக்கும் இடத்துக்கு நெய் கொண்டுச்செல்லப்பட உள்ளது. லட்டு தயாரிக்கும் இடத்தில் உபயோகப்படுத்திய நெய் டின் மற்றும் உபயோகப்படுத்தாத நெய் டின் ஆகியவற்றுக்கு தனித்தனி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இவ்வாறு சாம்பசிவராவ் பேசினார்.