தென்மேற்கு பருவ காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின்உற்பத்தி அதிகரிப்பு
5/25/2016 3:58:26 PM
ஆரல்வாய்மொழி: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென் மேற்கு பருவ காற்று காலங்களில் தான் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். கடந்த சில மாதங்களாக காற்று போதிய அளவு இல்லாத காரணத்தினால் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே இருந்தது. தற்போது தென்மேற்கு பருவ காற்று கன்னியாகுமரி எல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வீச தொடங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், குமாரபுரம், நெல்லை மாவட்டத்தில் பழவூர், அம்பலவாணபுரம், ராதாபுரம், காவல்கிணறு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 1250 மெகாவாட் திறன் கொண்ட ஒரு காற்றாலையில் 200 யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. அப்போது காற்றின் வேகம் 2 மீட்டராக இருந்தது, தற்போது 10 மீட்டராக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக 20 மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் வரையிலும் தென் மேற்கு பருவ காற்று அதிகமாக வீசும் என்பதால் இந்த காலகட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று காற்றாலை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மின் தடை ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.