அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணம்
5/25/2016 3:46:01 PM
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 65. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.எம்.சீனிவேல்(65). தேர்தலுக்கு முதல் நாளான கடந்த 15ம் தேதி இரவு இவர் திடீரென்று பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, மதுரை பீபிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். பின்பு கே.கே.நகரில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இதனால், அவரை மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
சீனிவேலின் சொந்த ஊர் மதுரையை அடுத்த விளாச்சேரி. அவருக்கு விஜயலெட்சுமி என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். சீனிவேல் சுமார் 20 வருடமாக திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர். திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் கடந்த 2001ல் வெற்றி பெற்ற 2006 வரை எம்எல்ஏவாக இருந்தார். தற்போது, திருநகர் வீடு கட்டுவோர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர், தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்து விட்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,932 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இன்று சட்டசபை கூடி, எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ள நிலையில் சீனிவேல் மரணமடைந்துள்ளார். இவரது மறைவால் சட்டசபையில் அதிமுகவின் எம்எல்ஏ பலம் 133 ஆக குறைந்துள்ளது. தற்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.