ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் 4 பேர் அறிவிப்பு
5/25/2016 3:44:13 PM
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தமாகாவில் இருந்து வந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உட்பட 4 பேர் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் எம்பிக்களாக இருந்த ராமலிங்கம், தங்கவேலு(திமுக), நவநீதகிருஷ்ணன், ரபி பெர்னாடு, பால் மனோஜ் பாண்டியன்(அதிமுக), காங்கிரசின் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரது பதவிக்காலம் ஜூனில் முடிகிறது. இதனால் அந்த காலி இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் வைத்திலிங்கம், வக்கீல் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதில் வைத்திலிங்கம், அமைச்சராக இருந்து, ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தேர்தல் நேரத்தில் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏற்கனவே மாநிலங்களவை எம்பியாக இருந்த நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.