சென்னை தம்பதியிடம் ஓடும் ரயிலில் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை
5/25/2016 3:40:53 PM
திருச்சி : சென்னை பழைய வண்ணாரபேட்டை தண்டலதெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (38). நகை வியாபாரி. இவரது மனைவி விஜயா அகிலா (30).புதுமண தம்பதிகள். கடந்த 18ம் தேதி திருச்செந்தூர் சென்று விட்டு சென்னை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த இவர்கள் அயர்ந்து தூங்கிவிட்டனர். ரயில் திருச்சி ஜங்ஷன் வந்ததும் விழித்து பார்த்து விட்டு மீண்டும் தூங்கி விட்டனர்.
ரயில் கரூர் மார்க்கத்தில் உள்ள புகழூர் அருகே வந்தபோது இருவரும் அணிந்திருந்த 12.5 பவுன் நகைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில் எஸ்பி ஆனிவிஜயா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.விசாரணையில் நாகை மாவட்டம் வேதராண்யம் அடுத்த அவரிக்காடு பகுதியை சேர்ந்த துரைமுருகன்(21), கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி கோதண்டராமபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(23) ஆகிய 2 பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
துரைமுருகன், சந்தோஷ்குமார் 2 பேரும் சிறிய திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட போது நண்பர்களாகி, பின்னர் வேளாங்கண்ணியில் சுற்றி திரிந்துள்ளனர். சம்பவத்தன்று திருச்சி ரயில் நிலையம் வந்து நாகர்கோவில் எக்ஸ்பிரசில் ஏறியுள்ளனர். முன்பதிவில்லா பெட்டியில் ஏதும் சிக்காததால் முன்பதிவு பெட்டிகளில் ஏறி கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.