வரி ஏய்ப்பு செய்பவர்கள் பெயரை வெளியிட வருமானவரித்துறை முடிவு
5/25/2016 3:40:09 PM
புதுடெல்லி: இந்த நிதி ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பெயரை பகிரங்கமாக வெளியிட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இந்திய மக்கள் தொகை 120 கோடியாக இருந்தாலும் இங்கு வருமான வரி செலுத்துபவர்கள் சுமார் ஒரு கோடி பேர் மட்டுமே. வரி ஏய்ப்பு செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்திருந்தார். ரூ. 20 கோடிக்கு அதிகமாக வரி பாக்கி வைத்திருப்பவர்கள் பெயர்களை மட்டும் வருமானவரித்துறை இதுநாள் வரை பகிரங்கமாக வெளியிட்டு வந்தது. தற்போது ரூ. 1 கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்திருப்பவர்கள் பெயரையும் பகிரங்கமாக வெளியிட முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கிகளில் பெருமளவில் கடன்வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரிபாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை 31க்கு முன்பாக வரிபாக்கி வைத்திருப்பவர்கள் ்பெயர் வருமானவரித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.