ஆசியாவில் முக்கிய சக்திகளாக விளங்கும் இந்தியா, சீனா: ஜனாதிபதி பிரணாப் பெருமிதம்
5/25/2016 3:29:41 PM
குவாங்சு: ஆசியாவில் முக்கிய சக்திகளாக இந்தியாவும் சீனாவும் விளங்குகிறது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் குவாங்சு நகரில் பிரணாப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவும் சீனாவும் சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்துவரும் நாடுகள். ஆசியா கண்டத்தில் உள்ள மற்ற நாடுகள் இவ்விரு நாடுகளை சார்ந்து இருக்கும். நம்முடைய மக்கள் மிகவும் அன்பானவர்களாக விளங்குகின்றனர். இந்தியா, சீனா இடையேயான நல்லுறவு நீடித்து வருகிறது.
சீனாவின் வளர்ச்சிக்கு இங்கு வசிக்கும் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாடுகள் பெருமைகொள்ளும் வகையில் உள்ளன. இந்தியர்கள் உலகம் முழுவதும் வெற்றிகரமானவர்களாக இருப்பதற்கு அவர்கள் செய்யும் வேலை, தொழில் மட்டும் காரணமல்ல; மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதே வெற்றிக்கு காரணம். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதன் மூலம் 2025ம் ஆண்டுக்குள் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். இது இந்தியா, சீனா மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே உள்ள வேறுபாட்டை களைய பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் உள்ளிட்டவற்றில் சமத்துவம் ஏற்பட வேண்டும். சிறந்த கலாசாரத்தை கொண்ட இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவதன் மூலம் வருங்காலத்தில் முன்னேற்றப்பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வந்த போதிலும் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மேக் இன் இந்தியா, திறன்மிகு இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
இன்று தலைநகர் பீஜிங் செல்லும் பிரணாப், சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இருநாட்டு உறவு, தீவிரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.