போலி நகை அடகு மோசடி : சென்னை வாலிபர் கைது
5/24/2016 4:15:00 PM
திருவெறும்பூர் : திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்(27). துவாக்குடி பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் 9ம் தேதி சென்னை மாதவரம் ரெக்சின் சுமா சந்திரபோஸ் தெருவை சேர்ந்த மாதவன்(35) என்பவர் துவாக்குடியில் உள்ள நாகராஜின் அடகுக்கடைக்கு வந்து, ‘பெயர் பூமிநாதன், துவாக்குடியில் வசிக்கிறேன். அவசர செலவு இருப்பதால் செயினை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள்’ என்று கேட்டுள்ளார். நாகராஜ் செயினை வாங்கி எடைபார்த்தபோது 19 கிராம் இருந்தது. அதற்கு நகைக் கடனாக ரூ.30,600 கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நாகராஜூக்கு அவசர பணத்தேவை இருந்ததால் கடந்த 21ம் தேதி அப்பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியில் செயினை அடகு வைப்பதற்காக கொண்டு சென்றார். அங்கு நகையை உரசிப் பார்த்தபோது போலி நகை என்பது தெரிந்தது. இந்நிலையில் போலி நகையை அடகு வைத்த மாதவன் நேற்று அடகு கடைக்கு வந்தார். அவரை நாகராஜ் பிடித்து துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையின்போதுதான் அவரது பெயர் பூமிநாதன் இல்லை. மாதவன் என்பதும், சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. மாதவனை போலீசார் கைது செய்தனர்.