செம்மர கடத்தலை தடுக்க புதிய சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்
5/23/2016 2:40:23 PM
திருமலை: ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுக்க புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் என டிஐஜி காந்தாராவ் தெரிவித்தார்.ஆந்திர செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி காந்தாராவ் திருப்பதியில் அளித்த பேட்டி: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஆந்திர மாநில 1967 வனத்துறை சட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்துள்ளார். அதன்படி செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் புதிய சட்டத்தின்படி அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.இதுவரை செம்மரம் கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் 7 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டு அவர்கள் சேர்த்த சொத்துகள், அவர்களின் பரம்பரை சொத்துக்களையும் முடக்க இந்த சட்டத்தில் இடம் உள்ளது.