அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்
5/21/2016 12:09:31 PM
தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குற்றால பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் நன்றாக விழுந்த நிலையில் நேற்று மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் சுமாராக விழுந்தது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவியில் தண்ணீர் இல்லை. தற்போது மழையில்லாததால் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை நன்றாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருந்ததால் ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள், நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவியில் ஆண்கள் மட்டும் வரிசையில் நின்று குளித்தனர்.குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுவதால் இதமான சூழல் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.