காப்பீட்டு திட்டத்தில் ரூ. 700 கோடி கொள்ளை: வைகோ குற்றச்சாட்டு
5/2/2025 3:43:12 PM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசியதாவது:சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்கவில்லை. அப்படிப்பட்டவருக்கு முதல்வர் பதவி தேவையா? அப்போதே அவரது பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறினேன். ஜெயலலிதாவுக்கு வாக்களிப்பது நாட்டிற்கு செய்யும் துரோகம் ஆகும்.
இன்றைக்கு 5 சதவீதம் மாணவர்கள் மது அருந்தி வருகின்றனர். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் 50 சதவீதம் மாணவர்கள் மது குடிப்பார்கள். தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 500 இடங்களில் அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளனர். அதிமுகவினர் பூத் கமிட்டியினருக்கு பல ரவுண்டுகளாக பணம் கொடுத்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காப்பீட்டு திட்டம் ஒரு பொய்யான திட்டமாகும். இந்த திட்டத்தில் 700 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.