ஊழலால் தமிழகம் பின்தங்கி விட்டது வெங்கையா நாயுடு பேச்சு
5/2/2025 3:42:49 PM
நெல்லை: ஊழலால் தமிழகம் மிகவும் பின்தங்கி விட்டது என்று நெல்லையில் நடந்த பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வெங்கையா நாயுடு பேசினார்.பாஜ சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நெல்லை டவுன் தேரடித் திடலில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: பட்டிமன்றம் போல் ஆரோக்கியமான விவாதம் நடப்பதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் ஊழலால் தமிழகம் பின் தங்கி விட்டது. பலமுறை ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்னரும் தமிழகத்தில் மின்வெட்டு, ஏழ்மை ஒழியவில்லை. தரமான கிராமச்சாலைகள் இல்லை. மருத்துவமனையோ, தேவையான டாக்டர்களோ, மருந்துகளோ இல்லை.
ஏழைகளுக்கு நல்ல வசிப்பிடம் இல்ைல. தேர்தல் வந்தால் தமிழகத்தில் இலவசங்களை இனிப்பு மிட்டாய் போல் வழங்குகின்றனர். இவை நிரந்தரமானவை அல்ல. மோடி அறிவித்த கங்கை - காவிரி இணைப்பு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களே நிரந்தரமானவை. இதேபோல் ராதாபுரத்துக்கு தாமிரபரணியிலிருந்து வெள்ளநீர் வடிகால் திட்டமும், மானூர் பள்ளமடை குளத்திற்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டு செல்லும் திட்டமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக செயல்படுத்தப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழைகள் இலவச காஸ் சிலிண்டர் பெறுவார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவதும் மின்வெட்டு இருக்காது. எனவே, இலவசங்கள் என்ற பெயரால் அறிவிக்கப்படும் தற்காலிக திட்டம் வேண்டுமா அல்லது நிரந்தர திட்டம் வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.லஞ்சம் அதிகம்முன்னதாக நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடு முன்னேற்றம் அடைய பல நல்ல திட்டங்களை மோடி தந்துள்ளார். வறுமை, ஊழல், லஞ்சம், மின்சாரம் துண்டிப்பு, வேலையின்மை ஆகியவை தமிழகத்தில் அதிகமாக உள்ளன. இந்தியாவில் இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லை. அவர்களை ஒரு கட்சியாக கருதவேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.