திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சால் அண்ணாநகர் தொகுதி மக்களிடம் எழுச்சி
5/2/2025 3:03:26 PM
அண்ணாநகர்: அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே. மோகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசிச் சென்ற பிறகு அத்தொகுதி மக்கள் மத்தியில் புது எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் கூறியது:அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, அண்ணாநகர் தொகுதிக்கென தனி தேர்தல் வாக்குறுதிகளை கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார்.அண்ணாநகர் அரசு பொதுமருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உயர் ஆராய்ச்சி மருத்துவ மையமாக உருவாக்கப்படும். இளம் பெண்களின் கல்வி ஆர்வத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு, இத்தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி துவக்கப்படும்.
அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் சமுதாய நலக்கூடங்கள், தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இளைஞர் தொழிற்பயிற்சி மையங்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுக்கு என தனியாக சிறப்பு பள்ளி நிறுவப்படும். இத்தொகுதியில் நியாய விலை கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து தடையற்ற பொருள் விநியோகம் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.அண்ணாநகர் தொகுதியை தனி தாலுகாவாக பிரித்து நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதோடு, மக்களுக்கான சேவை விரிவுபடுத்தப்படும். மழை வெள்ள நீர் வடிகால்கள் சீரமைக்கப்பட்டு, வெள்ளத்தடுப்பு பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்தப்படும் என்றார். எங்கள் பகுதி பிரச்னைகள் பற்றி பேசியது ஸ்டாலினுக்கும், அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கும் உள்ள அக்கறையை காட்டுகிறது. எனவே, எங்களது முழு ஆதரவையும் அவர்களுக்கு வழங்கிட உள்ளோம்.இவ்வாறு கூறினர்.