மே 5ல் இறுதி கட்ட தேர்தல் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி : மேற்கு வங்கத்தில் பரபரப்பு
5/2/2025 2:27:22 PM
மால்டா: மேற்கு வங்கத்தில் வருகிற 5ம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தில் கடந்த 30ம் தேதி 53 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலின் போதே திரிணாமுல், சிபிஎம் தொண்டர்கள் மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இறுதி கட்ட தேர்தல் வருகிற 5ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான மோதல்கள் மேலும் வலுக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் இன்று அதிகாலை மால்டாவில் ஜவுன்பூர் என்ற இடத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி சையது வாகர் ரசா கூறுகையில், மால்டாவில் நாட்டு குண்டு வெடிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளுர் ரவுடிகள் 3 பேர் எதிர்பாராமல் குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் என்றார். காயம் அடைந்தவர்கள் அனைவரும் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதி கட்ட தேர்தல் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.