திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி : தெலங்கானாவில் சோகம்
5/2/2025 2:22:02 PM
ஐதராபாத்: தெலங்கானாவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய திருமண கோஷ்டியினர் பயணம் செய்த லாரி மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தெலங்கானாவில் மேடக் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்த லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. தெகுல் வாடி என்ற இடத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 55 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள காமாரெட்டி கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லாரியில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேடக்கில் வந்த போது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து லாரியின் பின்புறம் அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.