கால்பந்து மைதான கட்டுமான பணியில் 3வது இந்தியர் பலி விசாரணை நடத்துகிறது கத்தார்
5/2/2025 2:11:36 PM
தோஹா: 2022ம் ஆண்டு பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நடக்கிறது. இதன் மூலம் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை கத்தார் பெறுகிறது. இதைெயாட்டி அங்கு கால்பந்து மைதானங்களின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும், நல்ல தங்கும் வசதி இல்லாதது உள்பட அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் புகார் உள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச மன்னிப்பு சபை, கத்தாரை எச்சரிக்கை செய்தது. இதனிடையே கத்தாரில் கால்பந்து மைதான கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றனர்.
தோஹாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்பயாட் மைதானத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த தொழிலாளர் ஜலேஸ்வர் பிரசாத் (48) கடந்த புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுமான பணிகளில் கடந்த 6 மாதங்களில் உயிரிழக்கும் 3வது இந்தியர் ஜலேஸ்வர் பிரசாத். இது குறித்து உலக கோப்பை கால்பந்து தொடர் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியட்டுள்ள அறிக்கை:
அல் கோர் மருத்துவமனையில் ஜலேஸ்வர் பிரசாத் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக மருத்துவனை தெரிவித்துள்ளது. இங்குள்ள வேலைசெய்யும் சூழ்நிலைகள் காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.