கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி பஞ்சாப் புதுகேப்டன் முரளி விஜய் பேட்டி
5/2/2025 2:11:09 PM
ராஜ்காட்: ஐபிஎல் தொடரில் நேற்று மாலை ராஜ்காட்டில் நடந்த ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 154 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் முரளி விஜய் 55 ரன் (44பந்து) எடுத்தார். குஜராத் தரப்பில் கவுசிக் 3 விக்கெட் சாய்த்தார். பின்னர் பேட்டிங் செய்த குஜராத் அணியின் மெக்கல்லம் 1, ஸ்மித் 15, ரெய்னா 18, பிராவோ 0, தினேஷ்கார்த்திக் 2 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவரில் அந்த அணி 9 விக்கெட் இழந்து 131ரன் மட்டுமே எடுக்க, பஞ்சாப் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அக்சர் பட்டேல் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் முரளி விஜய் கூறியதாவது:வெற்றி பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் மாற்றம் மட்டுமே வெற்றிக்கு காரணமல்ல. கூட்டுமுயற்சியால் கிடைத்த வெற்றி. முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு செயல்பட்டதால் பலன் கிடைத்தது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணியை வீழ்த்தியிருப்பது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. டேவிட் மில்லர் களத்தில் தொடர்ந்து ஆலோசனைகளை அளித்தார். அக்ஷர் பட்டேல் சிறப்பாக பந்து வீசினார். சந்தீப் சர்மா, மோகித் சர்மா ஆகியோர் துவக்கத்தில் நன்றாக பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி அளித்தனர், என்றார். பஞ்சாப் அணி அடுத்ததாக வரும் 4ம் தேதி ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.