மாட்ரிட் ஓபனில் இருந்து செரீனா விலகல்
4/30/2016 12:41:53 PM
மாட்ரிட்: உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காய்ச்சல் காரணமாக மாட்ரிட் ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாட்ரிட் ஓபன் தொடரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: துரதிருஷ்டவசமாக காய்ச்சல் காரணமாக மாட்ரிட் ஓபனில் இருந்து விலகுகிறேன். நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் விரைவில் களம் காண்பதை எதிர்நோக்கி செயல்பட்டு வருகிறேன் என கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 4 தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள செரீனா வில்லியம்ஸ், அதில் ஒன்றில் கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. செப்டம்பரில் யுஎஸ் ஓபன் அரையிறுதியில் தோல்வியடைந்த செரீனா, ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் இந்தியன்வெல்ஸ் தொடர்களின் பைனலில் தோல்வியடைந்தார். மியாமி ஓபனில் 4வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் வரும் திங்கள் கிழமை துவங்குகிறது.